கல் மண்டபம் நாவல்
சாதி தட்டில் உயர்ந்த சாதி என்று மக்கள் கருதும் சமூகத்திலும் ஒரு பிரிவினரின் வாழ்க்கை சொந்த சாதியினராலும் வெறுக்கப்பட்டு ஒடுக்கப்பட்டு , தீண்டத்தகாத நிலையிலும் , வறுமை ஏழ்மை பசி எல்லையில் இருப்பதையும் அழகாகச் சித்தரிக்கும் நாவல். அருமையான படைப்பு.
இவர்களை மேட்டுக்குடி தலித் என்று எழுத்தாளர் வெங்கட் சாமிநாதன் குறிப்பிட்டுள்ளார்.
புத்தகத்தை எடுத்தது தெரியும் முடிக்கும் வரை ஒரு தொய்வு இல்லாமல் சலிப்பு இல்லாமல் கதை நகர்வை உணர்ந்தேன். புத்தகம் முழுவதும் உணர்வின் பிணைப்பில் நகர்கிறது.
பிணத்தைத் தூக்குவதற்குச் சொந்தங்கள் இல்லை என்ற அவலம், அந்த வேலைகளைத் தனது வறுமையின் காரணமாக வயிற்றை நிரப்புவதற்கு அந்த சாதியிலிருந்து ஒரு மனிதன் வருகிறான். அதைச் சிறுவயதில் பார்த்தபொழுது மனம் பதைத்து அந்த உணர்வைப் புரிந்து அவர்கள் மேற்கொண்ட கஷ்டங்களையும் இன்னல்களையும் காவியமாக கண்முன் நிறுத்துகிறார் ஆசிரியர் வழக்கறிஞர் சுமதி.
ராமானுஜம் என்ற ராமன்ஜி ஶ்ரீரங்கத்தில் வைதீகத்தில் ஆரம்பித்து, சென்னையில் பார்த்தசாரதி அய்யங்காருடன் ஏற்பட்ட தர்க்கத்தில் வைராக்கியமாகத் தர்ப்பையைக் கீழிறக்கி வைத்து , அகப்பையைக் கையிலெடுத்து சமையல்காரனாகி, அன்பான மனைவி சௌந்தரம் அன்பையும் பாசத்தையும் அவளையும் அள்ளிக் கொடுத்து அழகாக குடும்பம் பொம்மலூர் ஐயர் தெருவில் வாழ்க்கையை நடத்திச் செல்லும்போது , சொந்த வீடு கனவு வந்து இரவு பகலாக வேலை செய்து பணம் சம்பாதித்து வீடுகட்டி குடித்தனம் செல்லும்போது கதை நகர்கிறது சோகத்தை நோக்கி , வறுமையை நோக்கி , கீழ்மையை நோக்கி , தாழ்வை நோக்கி , அடிமேல் அடி விழுகிறது. அள்ளி அள்ளி அவளையே தந்த சௌந்தரம் கர்ப்பிணி கோலத்தில் தன்னையே அழித்துக் கொண்டு தேசிகாச்சாரி என்ற தேசு ( கதையின் நாயகன்) ரங்கன் , ரங்கநாயகி என்ற மூன்று குழந்தைகளையும் தாயில்லாத தனிமையில் விட்டுவிடுகிறாள். அதன்பின் ராமன் ஜி மறுமணம் புரிந்து மனம் நொந்து வாழ்க்கை தடம் புரண்டு அவர் தன்னையே மாய்த்துக் கொள்ளும் போது தேசு வயது 16, பத்தாம் வகுப்பில் தோல்வி.
அதற்குப் பிறகு கதை என்பது தேசுவைச் சுற்றி அமைகிறது. பாடை தூக்கியாக , சவுண்டி காரனாக, பிராமணர்த்தம், வைதீகம் என்று அவன் படும் கஷ்டங்கள். அந்த தொழிலிலும் உள்ள நடுத்தரகர்கள், அவர்களுக்கான கமிஷன் போன்றவற்றினால் இந்த ஏழை தேசு படும் வேதனை. ஒரே சாதிக்குள் நடக்கும் சுரண்டல் , அதனால் ஒரு பிரிவினர்கள் அதிகார வர்க்கத்திலும், ஒரு பிரிவினர்கள் வறுமை நிலையிலும் வாழ்கிறார்கள் என்பதனை உணர்வின் விளிம்பு நிலைக்குச் சென்று அழகாகக் காட்டுகிறார் ஆசிரியர்.
அதனால் தேசு சந்திக்கும் குடும்பப் பிரச்சினைகள் என்று இரண்டு தலைமுறையாக குடும்பம் படும் கஷ்டத்தை உணர்வுப் பூர்வமாக விளக்குகிறார் ஆசிரியர்.
சோளிங்கரில் வெங்கடம்மாள், மணிசங்கர ஐயர் கதைகள், பொம்மலூர் ஐயர் தெருவில் விசாலம் மாமி வேம்பு கதைகள், சடகோபன் பெரியப்பா, சிங்கன் கதைகள், மாதவராவ் விஜயா கதைகள், பட்டுண்ணா வாத்தியார், அம்புலு மாமி கதைகள், கிட்டு வாத்தியார், அவரது அப்பா லைட் ஹவுஸ் கதைகள், கோம்ஸ், கிங் ஆஃப் டைகர் என்று நாவலில் ஊடாக பல உபகதைகள் என்று இரண்டு தலைமுறைகள் இந்த மாதிரி தொழிலில் ஈடுபட்டு ஏழ்மையில் எல்லை நில விளிம்பில் நிற்கும் மக்களின் உணர்வை வெளிப்படுத்தும் அருமையான நாவல்.
இந்த சமுதாயத்திலும் எல்லை நில மக்கள் இருக்கிறார்கள் என்பதனை உணர்வு ததும்ப உரைக்கிறார் ஆசிரியர்.
இந்த உணர்வுகள் சத்தியம் என்று உணர்ந்தவன் அடியேன். ஆதலால் இந்த நாவலை உணர்வுடன் ஒரே மூச்சில் முடித்தேன். எங்கள் ஊரிலும் 90 வரை பாடை கட்டி சொந்தங்கள் இடுகாடு வரை தூக்கிவருவார்கள். இப்பொழுது பாடை கட்டுவதற்கும் ஆட்கள் இல்லை , பாடையைத் தூக்குவதற்கும் பந்தங்கள் இல்லை. சொந்தங்கள் இல்லாத மரணம் , ஆட்கள் இல்லாத மரணம் என்பது அன்பு இல்லாத மரணம். அதுதான் மனிதன் சந்திக்கும் பெரிய வலி.
சொந்தங்கள் பந்தங்கள் நண்பர்கள் சூழ இடுகாடு செல்வது அன்பு கலந்த மரணம். அதுதான் வாழ்ந்த வாழ்க்கையின் சாட்சி, விழுமம். கதையின் முடிவில் முக்தி ரதம் பாடைக்குப் பதில் வருகிறது. அந்தமாதிரி ஒரு ரதம்தான் இப்பொழுது எங்கள் ஊரிலும். அதில் இறந்த உடலை ஏற்றி, அதனுடன் சொந்தங்களும் பந்தங்களும் இடுகாடு சென்றுவரும் நிலை. தன் சொந்த சாதிகளுக்குள் ஒடுக்கப்பட்ட மக்களாகக் கருதப்படும் இந்த மக்கள் இல்லையென்றால் மரணித்த உடலுக்கு என்னவாகும் என்று நினைத்துக் கூட பார்க்க முடியாது. ஸ்வாமி விவேகானந்தர் கூறுவார் " சுத்தம் செய்யும் தொழிலாளிகள் ஒரு நாள் வேலையை நிறுத்தினால் கல்கத்தா நகரம் நாறத் தொடங்கிவிடும்". அப்பொழுதுதான் அவர்கள் அருமை தெரியும். அவர்களை ஒடுக்குவதா? வெறுப்பதா? என்பது.
ஒரு மனிதன் வாழ்ந்தான் என்பதனை அவனது இறப்புக்கு வரும் கூட்டமும் , இறப்புக்குப் பிறகு அவன் பெயர் நிலைக்கும் நிலையிலும் உள்ளது என்பது ஸ்வாமி விவேகானந்தர் வாக்கு
ஏழ்மை , வறுமை , ஒடுக்கம் , தீண்டாமை என்பது எல்லா சாதி தட்டிலும் , சாதி உட்பிரிவு தட்டிலும், எல்லா மத தட்டிலும், மத உட்பிரிவு தட்டிலும், இனங்களிடமும் காலகாலமாக கண்ணுக்குத் தெரியாமல் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன என்பதற்கு இந்த நாவல் ஒரு விழிப்பு என்றால் மிகையாகாது. பணம், அதிகாரம் , அந்தஸ்து போன்ற வெளித்தோற்றங்களும், ஊழல் கமிஷன், சுரண்டல், ஏமாற்றல் போன்றவற்றை முன்னிறுத்தி இன்றைய மானிட வாழ்க்கை செல்கிறது. மானுடம் வென்றதம்மா என்ற கம்பனின் வாக்கைப் பொய்யாக்கிறது இன்றைய மானிடம். அதுதான் இந்த நாவலின் கருத்து.
ஆயிரத்தில் ஒருவன் வந்து முக்தி ரதம் கொடுக்க மானுடம் வென்றதம்மா என்ற கதையைச் சுபமாக முடிக்கிறார் ஆசிரியர் வழக்கறிஞர் சுமதி.
அனைவரும் படிக்க வேண்டிய அருமையான நாவல்.
மகர சடகோபன் தென்திருப்பேரை
கருத்துகள்
கருத்துரையிடுக