பிராயக்ராஜ் யாத்திரை - 1 (காசி யாத்திரை )
துபாயிலிருந்து வெள்ளிக்கிழமை இரவு புறப்பட்டு சனி காலை 9.30 மணிக்கு வாரணாசி விமான நிலையம் வந்து சேர்ந்தேன். விமான நிலையத்திலிருந்து நாட்டுக் கோட்டை செட்டியார் சத்திரம் செல்ல நான்கு சக்கர வாகனம் பிடித்தேன். கோயில் செல்லும் சாலைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன என்று சொல்லி வாரணாசி சந்திப்பு ரயில் நிலையம் பக்கம் இறக்கிவிட்டு விட்டார். 4-5 கிமீ தூரம் செல்ல வேண்டும். இருப்பது மனிதன் மிதிக்கும் சைக்கிள் ரிக்ஷா, எலக்ட்ரிக் ஆட்டோ. எலக்ட்ரிக் ஆட்டோ செல்லாது என்று சொல்லவும் , சைக்கிள் ரிக்சாவை பிடித்தேன். இதைப் பிடிப்பதற்கும் 1கிமீ நடந்து ஆகிவிட்டது. 2 கிமீ சென்ற பிறகு அவரும் இறக்கிவிட்டு விட்டார். கையிலொரு ட்ராலி பேக், தோளில் ஒரு பேக்கைப் போட்டுக் கொண்டு சத்திரம் நோக்கி நடந்தேன். மக்கள் வெள்ளத்தில் கூட்டமே நம்மை நகர்த்திய அனுபவத்தை உணர்ந்தேன்.
சத்திரத்தை அடைந்து குளித்து விட்டு காசி ஈஸ்வரனைச் சேவிக்கப் புறப்பட்டேன். கூட்டம் அதிகம். நான்கு வாயில்கள் வழியாக ஈஸ்வரனைத் தர்சனம் செய்ய 7 - 8 மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலையில், இரண்டாவது வாயில் வழியாகச் சென்றேன். ஒரு வழியாகக் ஒரு நிமிடம் தரிசித்து ஒரு உணர்வைப் பெற்றேன்.
விசாலாட்சி மற்றும் அன்னபூரணி அம்பாள் சன்னிதி பக்தர்கள் தரிசனத்திற்கு மூடப்பட்டு இருந்தன. எங்களுக்குக் கூறப்பட்ட காரணம் என்பது சிருங்கேரி ஸ்வாமி எழுந்தருளி கோயில் கும்பாபிஷேகம் முடிந்து சிறப்புப் பூஜைகள் செய்து கொண்டிருப்பதனால். பக்தர்கள் தர்சனத்திற்குக் குறுக்கே யாரும் இருக்கக்கூடாது என்பது அடியேனது கருத்து.
மாலை கங்கா ஆரத்தி ஒரு படகில் ஏறி , கங்கை நதியிலிருந்து ஆரத்தியைக் கண்டு சேவித்து ஒரு தெய்வீக உணர்வை வெளிப்படுத்தியதை உணர்ந்தேன். இயற்கையைத் தினம் வழிபடுவதன் மூலம் , கங்கா மாதா என்ற கோஷமும், பக்தியின் வெளிப்பாடும் நதியை இன்று வரை காப்பாற்றிக் கொண்டிருக்கிறது. நதியில் அனைத்து துறைகளையும் (Ghats) படகில் சென்று ஒரு முறை சுற்றி வந்தேன்.
மோடிஜியும் யோகிஜியும் சேர்ந்து கோயிலை விஸ்தாரப் படுத்தி பெரியளவில் கட்டி இருக்கிறார்கள். கங்கை நதிக்கரையிலிருந்து ஒரு பெரிய தாழ்வாரம் (Corridor) கட்டியுள்ளார். மோடி கட்டிய தாழ்வாரம் என்று கூறுகிறார்கள். இரண்டாவது வாயில் வழியாகச் சென்றதால் தாழ்வார அமைப்பைப் பார்க்க முடியவில்லை. இரண்டாவது வாயிலுக்கு எதிரில் ஒன்றாவது வாயிலுக்கு அருகாமையில் மசூதி என்பது இப்பொழுது உள்ளது.
மறுநாள் காலை 6 மணிக்குப் படகில் கங்கையின் மறுகரைக்குச் சென்று காசியில் கங்கா ஸ்நானம் செய்துவிட்டு , அனைத்து காட் வழியாக நடந்து கேதாரீஸ்வர் கோயில் சென்று வழிபட்டேன். அங்கிருந்து சங்கட் மோக்ஷ அனுமன் கோயிலுக்கு ஒரு எலக்ட்ரிக் ஆட்டோ மூலம் சென்று வழிபட்டேன். இது துளசிதாசர் ஏற்படுத்தி வழிபட்ட அனுமன்.
அங்கிருந்து மகாகவி பாரதி வாழ்ந்த வீட்டிற்குச் சென்றேன். அங்கு அவருடைய இல்லத்தில் சிறிது நேரம் இருந்துவிட்டு ஞானபீடத்தைத் தரிசித்த ஒரு உணர்வுப் பெற்றேன்.
ஆதிகேசவ பெருமாள் கோயில் இருப்பதைக் கேள்விப்பட்டு விசாரித்தேன் ஒரு ஆட்டோ ஓட்டுநரிடம். 20 கிமீ செல்லவேண்டும், நிறையச் சாலைகள் மூடப்பட்டுள்ளன. ஆனால் எங்கள் வீட்டிலுள்ள இரண்டு சக்கர வாகனத்தில் செல்லலாம் என்று சொல்லி அதன்படி சென்று தரிசித்தேன். வருண நதிக் கரையில் ஆதி கேசவ காட் என்ற படித்துறையில் அமைந்துள்ள விஷ்ணு கோயில். முதன் முதலில் காசிக்கு வந்த மூர்த்தி என்றும், அதற்குப் பிறகு விஸ்வநாதர் வந்ததாகவும் வரலாறு சொல்லப்படுகிறது அந்த ஸ்தலத்தில். ஆதிகேசவ வலக்கை சங்கு இடக்கை சக்கரம் ஏந்தி ( மாற்று நிலையில்) காட்சியளிக்கிறார்.
அங்கிருந்து பிந்து மாதவ கோயிலுக்குச் சென்று விஷ்ணுவைத் தரிசித்தேன்.
பெரும்பாலான வாரணாசி வீதிகள் குறுகலான சந்துகள். நமது சென்னை ரங்கநாதன் தெரு மாதிரி உள்ளன. மக்கள் கூட்டம் நெருக்கமான நேரத்தில் இந்த வீதிகளில் நடப்பது என்பது மிகவும் கடினம்.
இரண்டு காட் கங்கை நதிக்கரையில் முக்கியமாகப் பேசப்படுகிறது. ஒன்று அரிச்சந்திர காட் , மற்றொன்று மணிகர்ணிகா காட். இரண்டிலும் பிணத்தைக் கரையில் எரிக்கிறார்கள். மணிகர்ணிகா காட்டில் பிணம் 24 மணிநேரமும் எரிந்து கொண்டே இருக்கிறது. அதற்கான விறகுகள் அதிகமாக மலைபோல் அங்கங்கே குவித்து வைத்துள்ளதைப் பார்க்க முடியும். இந்த மணிக்கர்ணிகா காட் பக்கத்தில்தான் மோடிஜி கட்டிய விஸ்வநாதர் ஆலயத்தின் தாழ்வாரம் உள்ளது. இங்கு எரிக்கப்படும் பிணத்திற்கு விஸ்வநாதரின் பிரசாதம் அருள் கிடைக்கப் பெறுகிறது. அங்கிருந்து காசிக்கு விடை கொடுத்து திங்கள் காலை 4 மணிக்கு 20 கிமீ ஆட்டோவில் சென்று காரில் ஏறி பிரயாக்ராஜ் சென்றேன். பிரயாக்ராஜ் அனுபவம் ........( தொடரும்)
மகர சடகோபன் தென்திருப்பேரை
அடுத்த பகுதிக்கான காத்திருப்புடன்
பதிலளிநீக்குநன்றி. விரைவில் வரும்.
நீக்குஅருமை....🙏🙏🙏🙏
பதிலளிநீக்குநன்றி
நீக்குVery good narration of your journey. Waiting for the prayagraj one .
பதிலளிநீக்குநன்றி
நீக்கு