பூர்ணம் - 6


இக்கிகை" என்ற புத்தகம் உலகில் நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாக வாழும் ஜப்பானின் ஒக்கி நாவா மக்களின் வாழ்க்கை முறையைப் பற்றிக் கூறும் புத்தகம். இது மாதிரி உலகில் ஐந்து இடங்களில் மக்கள் நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாக வாழ்கிறார்கள். அந்த பகுதிகள் அனைத்திற்கும் "ப்ளு ஜோன்" என்று குறிப்பிடுகின்றார்கள். 

அதில் முதல் இடத்தில் வகிப்பது ஜப்பானின் ஒக்கி நாவா. இத்தாலியின் சார்டினியா, அமெரிக்கா கலிபோர்னியாவின் லோமா லிண்டா, காஸ்டாவின் தி நிக்கோயா ஃபேனின்சுலா, கீரிஸின் இக்கரியா. 

இந்த ஐந்து இடங்களிலும் மக்கள் அழுத்தம் இல்லாமல் நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாக வாழ்வதற்கு பொதுவாகக் காணப்படும் அம்சங்கள் என்பது நான்கு.
1. உணவு முறைகள் மற்றும் பழக்கவழக்கங்கள். சைவ உணவு மற்றும் மீன் வகைகள் 
2. உடற்பயிற்சி. நடை மற்றும் தோட்ட வேலைகள் 
3. வாழ்வதற்கான காரணம் அறிந்து அதற்காக வாழ்தல். 
4. சமுதாய அமைப்பு மற்றும் சமூக தொடர்பு ஏற்படுத்தல். 

வாழ்வதற்கான காரணத்தை அறிந்துகொண்டு வாழும்போது மற்ற மூன்றும் அதனுடன் சேர்ந்து அமையப் பெறும். ஒவ்வொரு மனிதனும் ஒரு செயலை செய்து முடிப்பதற்காக மனிதப்பிறவி எடுக்கிறான். அந்த ரகசியத்தை அறிந்து கொண்டால் வாழ்க்கை என்பதனை பூரணமாக வாழமுடியும். அவன் பிறந்த நோக்கம் செயலின் மூலம் நிறைவேறும் சமயத்தில் அவனது மரணம் ஏற்படும் என்பது உலக வாழ்வியல் மரபின் தத்துவமாகக் கருதப்படுகிறது. 

லோகா திரெபி என்ற சிகிச்சை முறை கண்டுபிடிப்பாளர் டாக்டர் விக்டர் ப்ராங்கில் "Man's Search for Meaning" என்ற புத்தகத்தில் வாழ்வதற்கான காரணத்தை முதலில் அறிய வேண்டும் என்று குறிப்பிடுவார். மனிதன் ஏன் தற்கொலை செய்து கொள்கிறான் என்பதற்காகக் காரணம் அவன் வாழ்வதற்கான காரணத்தை அறியாத வகையில் இருப்பதனால் என்று கூறுவார்.‌ சமுதாயத்துடன் நன்கு பழகி தொடர்பை ஏற்படுத்திக் கொள்வது என்பது ஓரளவு தற்கொலை முயற்சியைத் தடுக்கும். 

டாக்டர் விக்டர் என்பவர் நீயுரோ மற்று மனநல மருத்துவர். அவர் ஒரு யூதர் என்பதனால் ஹிட்லர் மூலம் சிறைப்படுத்தப்பட்டு தாய் தந்தை மனைவியை இழந்து , இரண்டு முறை கேஸ் சேம்பர் வரை சென்று உயிர்தப்பி , நான்கு வருடம் நினைத்துப் பார்க்க முடியாத கஷ்டங்களை அனுபவித்து, தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சக கைதிகளுக்கு மனநல ஆலோசனைக் கூறி அதனைத் தடுத்து வாழவைத்தவர். அப்படி சிறையிலிருந்தபொழுது அனுபவித்த கஷ்டங்களை இந்த "Man's Search for Meaning" என்ற புத்தகத்தில் எழுதினார். 92 வயது வரை வாழ்ந்து, பிறவியின் நோக்கமான "லோகா திரெபி" முறையை உலகுக்கு வழங்கியவர். வாழ்வதற்கான காரணத்தை அறிந்து கஷ்டங்களிலும் முழுமையாக வாழ்ந்தவர். வாழ்வதற்கான காரணம் பிறவியின் நோக்கம் நிறைவேற்ற என்பது அவரது பூரணத்தின் அடையாளம். 

இந்த ப்ளு ஸோன் கிராமங்களில் மக்கள் ஒரே வீட்டில் அனைவரும் கூடிச் சமையல் செய்து சாப்பிட்டு, கூட்டமாக நடனம் ஆடுவது , தோட்டத்தில் அவர்களுக்குத் தேவையான காய்கறிகளைப் பயிரிடுவதன் மூலம் உடல் உழைப்பு, கூடிய மட்டும் நடந்து செல்வது அல்லது சைக்கிளில் செல்வது என்று இயல்பாகவே வாழ்க்கை முறையை அமைத்துக் கொள்கிறார்கள். ஒக்கிநாவா பீர் , சார்டினியா திராட்சை ஒயின் என்பது உலக பிரசித்தம் என்கிறார்கள். அளவோடு மக்கள் உணவோடு மது அருந்துகிறார்கள். கூடி அனைவரும் நமது கூட்டுறவு தொழில் போல் சிறுசிறு தொழிலை வயதான காலத்திலும் அழுத்தம் எதுவும் இல்லாமல், அதிகப் பணம் சம்பாதிக்கும் நோக்கமில்லாமல் அமைதியாகச் செய்து வாழ்கிறார்கள். 

மக்கள் நீண்ட ஆயுளுக்குக் காரணம் அறிய முற்படும்போது மேற்கூறிய நான்கு மற்ற காரணங்களினால் என்பது தெரியவருகிறது. இங்குப் பூர்ணம் என்பது அழுத்தம் இல்லாமல் ஆரோக்கியமாக நீண்ட ஆயுளுடன் கூடி வாழ்வது என்பது. ஆயுள் என்பது பலனாக அமைகிறது. குறைந்த ஆயுளில் மனநிறைவுடன் பிறப்பின் நோக்கத்தை நிறைவேற்றிச் சென்றவர்கள் இந்திய ஆன்மீக மரபில் இருக்கிறார்கள். இதனால் ஆயுள் என்பது பூரணத்திற்கான விடை இல்லை என்பது தெரிகிறது. பூரணத்திற்கான விடை என்பது மன நிறைவான வாழ்க்கை. 

பசி என்று வருபவருக்குப் பணம் கொடுப்பதைக் காட்டிலும், உணவு இடுவது என்பது போதும் என்ற மன நிறைவை ஏற்படுத்தி வாழ்த்திச் செல்வார்கள். பணமாகக் கொடுத்தால் போதாது என்று சொல்லி இன்னும் வேண்டும் என்று வற்புறுத்துவார்கள் என்று எனது அப்பா அடிக்கடிச் சொல்லுவார். பணம் கொடுக்கவில்லை என்றால் மனநிறைவின்றி சபித்துச் செல்வார்கள். 

ஜெனிஃபர் ப்ரிஹேனி வாலஸ் எழுதிய "Never Enough" என்ற புத்தகத்தில் போதாது என்ற மனம் படைத்த பெற்றோர்களினால் குழந்தைகளுக்கு ஏற்படும் இன்னல்களையும், அதனால் விளையும் மன அழுத்தங்கள், மனநோய்கள், உடல் உயிர் சிதைவுகள் போன்றவற்றைத் துல்லியமாகப் புள்ளி விபரங்களுடன் விளக்கியுள்ளார். 

அவர் இந்த புத்தகத்தில் ஒரு விஷயத்தைத் தெளிவுபடத் தெரிவிக்கிறார். அதுதான் "சாதனை கலாச்சாரம் என்பது நச்சுத்தன்மை கொண்டது". நச்சுத்தன்மை சமுதாயத்தைச் சீரழிக்கிறது என்பதனை புள்ளி விபரங்களுடன் விளக்குகிறார்.

அழுத்தம்,ஒப்பீடு என்பதெல்லாம் எல்லை அறிந்து செயல்படக்கூடிய விஷயம். முற்றிலும் அகற்றினாலும் வளர்ச்சி என்பது தடுக்கப்படும்

"போதும் என்ற மனம்" அமைதியாக ஆரோக்கியமாக வாழ்வதற்கு வழி வகுக்கிறது. "போதும் என்ற மனமே பொன் செய்யும்" என்பது பூரணத்தின் அடையாளம்.

சமீபத்தில் வெளிவந்த லக்கி பாஸ்கர் படம், போதும் என்ற மனம் இல்லாமல் கதாநாயகன் எதிர்மறை செயல்களின் மூலம் பணம் சம்பாதிக்க நேரிட்டு, நிம்மதி இழந்து படும் கஷ்டங்களைக் காண்பிக்கிறது.‌ இதனை ஒரு கட்டுரையாகத் தந்துள்ளேன். படத்தின் முடிவு என்பது வேறு, அதனுடன் நமக்குக் கருத்து வேறுபாடு உண்டு. அது சரியும் கிடையாது என்று நினைப்பவன்.‌

போதாது என்ற மனம் " பரிபூரண பொறிக்குள் (Perfection Trap)" அழைத்தும் செல்லும் வழி என்பதும் புலப்படுகிறது. 

                      ........ ( தொடரும்)

மகர சடகோபன் 
தென்திருப்பேரை 


 





கருத்துகள்

  1. வாழ்வதற்கு உண்டான நோக்கத்தை அறிந்து அதன்படி வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் மிக சொற்பமே.

    பணம் சம்பாதிப்பதற்கு மட்டுமே வாழ்க்கை உறவினர்கள் இரண்டாம் பட்சம் என்று இருந்து கொண்டு இளமைக் காலத்தில் பணம் பணம் மற்றும் அந்தஸ்து என்று அதன் பின்னால் அலைந்து வயது மூக்கில் உறவினர்களை தேடும் பொழுது நமது அருகில் யாரும் இருப்பதில்லை.

    ஒரு சிலரோ தனக்குத் தேவையான பொருளையும் பணத்தையும் சம்பாதித்த பின்பும் ஏனோ ஓய்வெடுக்க மனம் இல்லாமல் இருக்கின்றனர்.

    பதிலளிநீக்கு
  2. போதும் என்ற மனம்" அமைதியாக ஆரோக்கியமாக வாழ்வதற்கு வழி வகுக்கிறது. "போதும் என்ற மனமே பொன் செய்யும்" என்பது பூரணத்தின் அடையாளம்.


    அருமையான விளக்கம்

    பதிலளிநீக்கு
  3. எக்காலத்திற்கும் தேவையான மனநிலையை அருமையான உதாரணங்களுடன் எழுதிஉள்ளீர்கள்.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

எல்லைச்சாமி

பிராயக்ராஜ் யாத்திரை - 1 (காசி யாத்திரை )

பிராயக்ராஜ் யாத்திரை - 2 (திரிவேணி சங்கமம்)