அண்ணல் இராமானுஜர் கண்ட புரட்சி -9

 




தொண்டர் குலத்தில் தொண்டு செய்வதை இயற்கையாகக் கொண்ட பூணூல் அணியாத வைணவர்கள் செய்த தொண்டின் ஏற்றத்தைப் போற்றி, சாதி வித்தியாசம் இல்லாமல் போற்றத்தக்க ஶ்ரீ வைஷ்ணவ ஆசாரிய வரிசையில் சேர்த்து அவர்களைப் பெருமைப்      படுத்தியது மட்டுமல்லாமல், பிற்காலத்தில் அனைத்து ஶ்ரீ வைஷ்ணவர்களும் கொண்டாடும்படி ஏற்பாடு செய்து வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 


திருகச்சி தம்பிகள் உற்சவம், திருமங்கையாழ்வார், நம்மாழ்வார் உற்சவங்கள் என்பது மிகவும் பிரபலமாக இன்றளவும் கொண்டாடப்பட்டு வருகிறது, என்பதன் மூலம் வைணவ பரம்பரையில் சாதிகள் ஒரு தடை இல்லை . ஆனால் சரணாகதி தத்துவத்தை ஏற்றுக்கொண்டு திருமாலின் அடியார்களாக வாழ்வது என்ற கொள்கை ஒன்றுதான் அவர்கள் எல்லோரையும் ஒரு குடையின் கீழ் இணைக்கிறது என்பதுதான் உண்மை.


"யாக அனுயாக உத்தர வீதிகளில் 

காய அன்ன ஸ்தல சுத்தி பண்ணின

வ்ருத்தாசாரம்"


யாகத்தில் காய சுத்தி பண்ணின  வ்ருத்தாசாரம் என்ற ஆசார்ய ஹ்ருதயம்  வாக்கியம், பிள்ளை  உறங்காவில்லி  தாஸர்  என்ற பாகவதோத்தமர் தேஹத்தைத்  தொடுவதன் மூலம் ஶ்ரீ ராமானுஜர் அவர்களுக்கு  தேஹசுத்தி  ஏற்பட்ட வைபவத்தைப்  பார்த்தோம்.‌


உறையூரை ஆண்ட சோழ மன்னன் அரசவையில் பாதுகாவலர் தலைவராக பணிபுரிந்த மல்லர் ஶ்ரீ தனுர் தாஸர் என்பவர். அவரது மனைவி பொன்னாச்சியார். ஒருநாள் காவேரி மணலில் இருவருமாக நடந்து வந்து கொண்டிருந்தனர். அப்பொழுது ஆச்சரியமான ஒரு சம்பவத்தைத் துறவியான ஶ்ரீ ராமானுஜர் பார்க்கிறார். பொன்னாச்சியார் காவேரி மணலில் நடந்துவர , அவளது கண்களைப் பார்த்தவாறு குடை பிடித்துக்கொண்டு , மற்றொரு கையினால் அவளது கால்களுக்கு விரிபாவாடை விரித்துக் கொண்டும் தனுர் தாஸர் நடந்து வருகிறார். அவளது மேனியில் சூரிய ஒளி படாதுவாறும், கால்களில் மணல் சூடு படாதுவாறும்  மிகக் கவனமாகப்  பார்த்துக் கொண்டு நடந்து வருகிறார். 


இந்தச் செயல் என்பது ஒரு விசித்திரமாக ஸ்வாமிக்கும் அவரது சிஷ்யர்களுக்கும் தோன்றுகிறது. அவனது அடிமைத் தனத்தை நினைத்து ஶ்ரீ ராமானுஜர் வியக்கிறார். தனுர் தாஸரிடம் சென்று , தாங்கள் இவ்வாறு செய்வதற்கான காரணம் என்ன என்று வினவினார். அதற்கு தாஸர் அவளது கண்களின் அழகுக்குத் தோற்று இவ்வாறு செய்து வருகிறேன் என்று கூற , இதைவிட அழகான கண்களைக் காட்டினால் அதற்கு அடிமை கைங்கர்யம் செய்வதற்குச் சம்மதமா என்று வினவினார். அதற்கு தாஸர் , பொன்னாச்சியின் கண்களை விட அழகாக இருந்தால், அழகான கண்களுக்கு அடிமை என்று பதில் கூறினார். 


தனுர் தாஸர் மற்றும் பொன்னாச்சியாரை அழைத்துக் கொண்டு அரங்கன் முற்றத்திற்கு வந்து , திருப்பாணாழ்வாருக்குக் காட்டிய செவ்வரி ஓடிய அழகிய திருக்கண்களைக் காட்டியருளுமாறு அரங்கனைப் பிரார்த்தித்து நிற்க , அரங்கனும் அழகிய கண்களை தாஸர் தம்பதியர்களுக்குக் காட்டியருளி அவர்கள் இருவரையும் ஆட்கொண்டார். அன்று முதல் இராமானுஜரை ஆசாரியனாக ஏற்றுக்கொண்டனர் தாஸர் தம்பதியினர். 



ஶ்ரீ ராமாயணத்தில் லக்ஷ்மண் ராமனை வனவாச காலத்தில் உறங்காமல் காப்பாற்றியது போல் , தாஸர் இராமானுஜரை உறங்காமல் கவனித்து வந்தார். ஆதலால் அவரது பெயர் பிள்ளை உறங்காவில்லி தாஸர் என்று அழைக்கப்பட்டது. இருவரும் மடத்தில் தங்கி இராமானுஜருக்குக் கைங்கர்யம் செய்து வந்தனர்.  


பிள்ளை உறங்காவில்லி தாஸர்:


இருவரும் பகவத் பாகவத கைங்கர்யத்தில் தாங்களுக்கு நிகர் யாரும் இல்லை என்ற அளவுக்கு கைங்கர்யம் செய்து வந்தனர்.‌


அரங்கன் திருவீதி உலா வரும் போது உறங்காவில்லி தாஸர் கையில் வாளேந்தி வருவது என்பதை வழக்கமாக வைத்திருந்தார். அதற்கான காரணம், அரங்கன் திருமேனிக்கு புறப்பாடு காலத்தில் ஏதாவது ஒன்று நேருமானால், வாளைக் கொண்டு தன்னுயிரை முடித்துக் கொள்வதற்காக என்று கூறினார். அரங்கன் திருமேனிக்கு ஒன்றும் நிகழவில்லை , அவருடைய வாளுக்கும் வேலை வரவில்லை என்பதுதான் அவருடைய வரலாற்றிலிருந்து தெரியவருகிறது. இதிலிருந்து நாம் உணரவேண்டிய பாடம் என்பது வில்லி தாஸர் அரங்கன் மேல் காட்டிய பரிவு அளவிலா முடியாது. 


மேற்கூறிய சம்பவம் "வார்த்தமாலை"  வார்த்தை  எண் 124 ல் இவ்வாறாகக் கொடுக்கப்பட்டுள்ளது .

 

வார்த்தை எண் 124:

"விக்ரமசோழன் திருவீதியிலே திருவரங்கச் செல்வர் எழுந்தருளநின்றால், பிள்ளை உறங்காவில்லி தாஸர் ஆயுதம் எடாமல் சேவிப்பர்; அருளாளப்பெருமாள் எம்பெருமானார், "பிள்ளாய்! உன்னுடைய ஆயுதம் என்று விநியோகப்படுவது" என்று கேட்க, உம்முடைய அஞ்ஸலிபவித்ரம் விநியோகப்படுமன்று அடியேனுடைய ஆயுதம் விநியோகப்படும் என்றார்" 


பெருமாளிடம் பெரியாழ்வார் காட்டிய பரிவு என்பது ஆழ்வாரைப் பல்லாண்டு பாடச்செய்தது. வில்லி தாஸர் காட்டிய பரிவு என்பது அவரை வாளேந்த வைத்தது . 


பிள்ளை உறங்காவில்லி தாஸர், பொன்னாச்சியார் இருவரும் பகவத் பாகவத விஷயங்களை ஆழமாகக் கற்று மிகுந்த ஞானம் படைத்து இருந்தனர். 


"பாலேய் தமிழர் இசைகாரர் பத்தர்" என்ற திருவாய்மொழி பாசுரத்திற்குக் கூரத்தாழ்வான் அர்த்தம் சாதிக்கையில், பாலேய் தமிழர் என்றால் ஶ்ரீ பராங்குச நம்பி என்றும், இசைகாரர் என்றால் திருவரங்கப்பெருமாள் அரையர் என்றும், பத்தர் என்றால் பிள்ளை உறங்காவில்லி தாஸர் என்றும் கூறுவார், என்று நம்பிள்ளை வ்யாக்னத்தில் உள்ளது. தாஸர் ஒரு சிறந்த பக்தர் என்பது இதன்மூலம் புலப்படுகிறது.


நாலாயிர திவ்ய பிரபந்தம் இயற்பா சாற்றுமறையின் போது , மணவாள மாமுனிகள் இயற்றிய "இயல் சாற்று" சேவிப்பது என்பது வழக்கத்தில் உள்ளது சில திவ்ய தேசங்களில். பல ஆசாரியர்களின் பாடல்களை ஒன்று திரட்டி இயல் சாற்றில் இடம் பெறச் செய்தார் மாமுனிகள். இயல் சாற்றின் முதல் பாடல் என்பது பிள்ளை உறங்காவில்லி தாஸர் எழுதிய பாடல். அந்த பாடலை முதல் பாடலாக அமைத்தார் இராமானுஜரின் புனர் அவதாரமான மணவாள மாமுனிகள்.‌ அவருடைய ஆசார்ய அபிமான ஞானம் இப்பாட்டில் வெளிப்பட்டதனால்  மாமுனிகள் இந்தப் பாடலை முதல் பாடலாக இயல் சாற்றில் அமைத்தார். பகவத் பாகவத ஞானம், ஆசார்ய அபிமான ஞானம் போன்றவைகள் ஶ்ரீ வைஷ்ணவத்தில் பார்க்கப்பட்டது, சாதிகள் அல்ல என்பதற்கு சிறந்த சான்றுகள். 


பிள்ளை உறங்காவில்லி தாஸர் அருளிச்செய்தது:


"நன்றும் திருவுடையோம் நானிலத்தில் எவ்வுயிர்க்கும்

ஒன்றும் குறையில்லை ஓதினோம் -குன்றம்

எடுத்தான் அடி சேர் ராமானுஜன் தாள்

பிடித்தார் பிடித்தாரைப் பற்றி"


பொன்னாச்சியார்:


அனந்தாழ்வான், எச்சான்,தொண்டனூர் நம்பி, மருதூர் நம்பி என்ற நான்கு மிகப்பெரிய ஆசார்யர்கள் இராமானுஜர் திருவடிகளில் தண்டன் சமர்ப்பித்து, இவ்வாத்மாவுக்கு ஆசாரியன் ஒருவனோ, பலரோ, இத்தனை பேர் உண்டென்று நிச்சயித்து அருளிச் செய்ய வேணும்" என்று கேட்க, பொன்னாச்சியாரை கேளுங்கோள் என்று இராமானுஜர் அருளிச்செய்தார். 


அவர்களும் பொன்னாச்சியார் இடத்திற்குச் சென்று மேற்கூறிய கேள்விகளைக் கேட்க, இந்த கேள்விகளுக்கு ஸ்வாமி இராமானுஜர் ஒருவரால் மட்டுமே பதில் கூறமுடியும் என்று கூறி , மேலும் பொன்னாச்சியார் பதில் ஏதும் கூறாமல், தலைமுடியை உதறி ஒன்றாக ஒட்ட முடிந்து கொண்டைப் போட்டுக் கொண்டு, அபலையான அடியேனுக்கு இதற்குப் பதில் தெரியுமோ?எம்பெருமானார் தாமே அருளிச் செய்ய வேணும் என்று கூறி , தரையிலே கிடந்த காவி நூலை எடுத்து தலைக் கொண்டையினுள் வைத்துக்கொண்டு உள்ளே எழுந்து சென்றாள். 


பொன்னாச்சியார் சொன்ன மாதிரியே அவர்கள் ஸ்வாமி இராமானுஜரிடம் வந்து, தாங்கள் தான் அதற்காக அர்த்தத்தை விளக்க வேண்டும் என்று  கூறி உள்ளே சென்றாள் என்றவுடன் , ஸ்வாமி அப்பொழுது அவள் செய்த காரியம் என்னவென்று கேட்க,  தலைமுடியை உதறி ஒன்றாக ஒட்ட முடிந்து கொண்டையாகப் போட்டுக்கொண்டு, கீழேயிருந்த  காவி நூலை எடுத்து கொண்டையினுள் வைத்துக்கொண்டு உள்ளே சென்றாள் என்ற விபரத்தைக் கூறினார்கள். பொன்னாச்சியார்  அவளது செய்கையின் மூலம் இதற்கான உயர்ந்த அர்த்தங்களைச் சாதித்துள்ளாள் என்று ஸ்வாமி கூறினார். 


அவளது திருக்குழற்கற்றையை உதறியதனால் இவ்வாத்மாவுக்கு ஓரோராகாரத்தாலே பலராயிருக்குமென்றபடி, ஒன்றாக முடிந்து                            கொண்டையிட்டதனால் இவனுக்கு ஆசாரியனாக நின்று பேற்றைப் பண்ணிக்கொடுக்கிறவன் ஒருவன் என்கிறபடி,  தரையில் கிடந்த காவி நூலை எடுத்ததனால் காவி வேஷ்டி தரித்த அடியேனை ஆசாரியனாகவும், காவி நூலைக் கொண்டையில் உள் நுழைத்து வைத்ததனால் ஆசாரியனை  ஹ்ருதயத்துக்குள்ளே, பேணிக் கொணர்ந்து புகுத வைத்துக் கொண்டேன் என்கிறபடி , ஆசாரியனைத் தினம் அநுசந்தித்துக்    கொண்டு இருக்கையே , ஆத்மாவுக்கு  ஸ்வரூபம் என்று  பொன்னாச்சியார் செய்கையினால் விளக்கியுள்ளார் என்று ஸ்வாமி இராமானுஜர் அருளிச்செய்தார். 


பொன்னாச்சியார் பகவத் பாகவத பக்தியில், ஆசார்ய அபிமானத்தில் ஞானம் மிகுந்தவர் என்பதனை "வார்த்தமாலை" வார்த்தை எண் 86 , 344 ல் அழகாக குறிப்பிடப்பட்டுள்ளது.  


வார்த்தை எண் 86:

"பொன்னாச்சியார் கூரத்தாண்டாளுக்கு ப்ரஸாதித்த வார்த்தை; - ஸ்வரூபநஜ்ஞன் ஸ்வயம், ஸ்வரூப நிரூபணம் பண்ணவே, ஸ்வரூபாநுரூபமான உபாயோபேயாதிகள் உபந்நமாய்ப் போருங்காணும் என்றருளிச்செய்தார்"


ஸ்வரூப நிரூபணம் பண்ணவே -  ஆசார்ய சேஷத்வ பாரதந்த்ர்யங்களே ஸ்வரூப நிரூபண தர்மம் என்று நிஷ்கர்ஷிக்கை, 

ஸ்வரூபாநுரூபமான உபாயோபேயாதிகள்- முற்கூறிய ஸ்வரூபத்துக்குத் தகுந்தவையான ஆசார்ய அபிமானமாகிற உபாயமும், ஆசார்யன் உகக்கும் கைங்கர்யம் முதலானவையாகிற உபயேங்களும், 

உபந்நமாய்ப் போருங்காணும்- பொருத்தமாய் ஏற்படும் 


சேஷத்வம் – எம்பெருமானுக்குத் தொண்டு செய்ய எப்போதும் இசைந்திருத்தல். ஸ்ரீராமனுக்கு லக்ஷ்மணனைப் போல.


பாரதந்த்ர்யம் – எம்பெருமானுக்குப் பணி செய்வதில் அவனிட்ட வழக்காக இருப்பது. பரதனைப் போல. பரதன் ஸ்ரீராமனைப் பிரிந்திருக்கவும் இசைந்து பெருமாள் திருவுள்ளப் படியே நடந்து காட்டினான்.


உபாயம் - இலக்கை அடையக்கூடிய வழிமுறைகள்

உபேயம் - அடைய வேண்டிய இலக்கு


எம்பெருமான் திருவடியே உபாயம் உபேயம் என்று சொல்லுவது உண்டு. அவன் திருவடி மூலமாக அவன் திருவடி அடைவது, அடைந்து அவன் உகப்புக்கு கைங்கர்யம்.‌


பெருமாள் மீது அபிமானமும் கைங்கர்ய சுவை ஏற்படுவதை விட ஆசார்ய அபிமானமும் கைங்கர்யமும் உகந்தது என்பது பொன்னாச்சியார் வார்த்தை. 


வார்த்தை எண் 344: 

"பொன்னாச்சியார் வார்த்தை:  பாண்டிய மண்டலத்திலே ஒரு வைஷ்ணவனுடைய வைஷ்ணவத்வத்தைக் கொண்டாட, " எழுதி அணிந்த வைஷ்ணவத்வமோ, எல்லை நிலத்தில் வைஷ்ணவத்வமோ?" என்று.


"பன்னிரு திருமண்காப்புகளையும் திருமேனியில் எழுதியணிந்துக்கொண்டு, பகவத் பாகவத சேஷத்வ பாரதந்த்ரியமில்லாத வைஷ்ணவத்வமோ?  அல்லது எல்லை நிலமான பாகவத விஷயம் வரையில் சேஷத்வ பாரதந்த்ர்யங்கள் கொண்ட வைஷ்ணவத்வமோ, அவர்களுடைய வைஷ்ணவத்வம்? என்று கேட்டாள்" என்றபடி 



பொன்னாச்சியாரின் பகவத் பாகவத ஞானம் என்பது மிகவும் போற்றத்தக்க வகையிலிருந்தது என்பதற்கு மேற்கூறிய சம்பவமே சான்று


இவ்வாறு பகவத் பாகவத கைங்கரியத்தில் ஆழ்ந்து  இராமானுஜருக்கு அநுதினம்  கைங்கரியம் செய்து வந்து கொண்டிருந்த காலத்தில்,  இராமானுஜர் வடகாவேரியில்  தீர்த்தமாடித் திரும்பும் கால் பிள்ளை  உறங்காவில்லி தாஸர் தோளில் கையிட்டு எழுந்தருள்வார்.‌இதன் மூலம்  இராமானுஜருக்கு  தேஹசுத்தி உண்டானது என்று ஆசார்ய ஹ்ருதயம் விளக்குகிறது.‌ இதன் மூலம் மெய் மனம் வாக்கு என்ற முக்கரணங்களினாலும் பகவானை அடையச் சாதிகள் தடை இல்லை என்பதனை செய்து காட்டியவர் அண்ணல் இராமானுஜர். 


இந்த சம்பவம் "வார்த்தமாலை" வார்த்தை எண்: 326ல் குறிப்பிடப்பட்டுள்ளது. அதனை விளக்கமாக அடுத்த பகுதியில் காணலாம். 


"இராமானுஜன் தாள் பிடித்தார் பிடித்தாரைப் பற்றியவர்க்குக் குறை ஒன்றும் இல்லை" என்பதுதான் ஒரே வழி. 


பிள்ளை உறங்காவில்லி தாஸர் திருவடிகளே சரணம்

இராமானுஜர் திருவடிகளே சரணம் 


மகர சடகோபன்

தென்திருப்பேரை 






கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புள்ளும் சிலம்பினகாண் புள்ளரையன் கோயில் (அடியேன் அனுபவம் இன்று)

கம்பனின் அம்பறாத்தூணி

மக்களின் தலைவன்