விஜயதசமி விழா

 





இன்று விஜய தசமி விழா


இது ஒரு சனாதன தர்மத்தின் திருவிழா.

வைணவம் , சைவம்  என்ற இரு பிரிவுகளும், அம்மனை வழிபடக்கூடிய சாக்தம் என்ற பிரிவினரும், அனைத்து ஷண்மத பிரிவினரும் இந்த நவராத்திரி திருவிழாவை அவரவர் வழியில் கொண்டாடி , இறுதியில் விஜயதசமி  அன்று நிறைவு செய்கிறார்கள்.

பொதுவாகத் தர்மம் தழைத்தோங்கிய நாள். அதர்மம் அழிக்கப்பட்டு தர்மம் நிலைப் பெற்ற வெற்றி நாள்.

"பலமே வாழ்வு பலவீனமே மரணம்" என்பது விவேகானந்தர் வாக்கு.

பலம் என்பது தனி மனிதனுக்கும், சமுதாயத்துக்கும், சமுதாயம் சார்ந்த தேசத்துக்கும் பொதுவாகப் பொருந்தும். பலம் என்பது ஆயுதமாக இருக்கலாம் அல்லது ஏதோ ஒரு கருவியாக இருக்கலாம், செல்வமாக இருக்கலாம், கல்வியாக இருக்கலாம் அல்லது ஏதோ ஒரு வித்தையாக இருக்கலாம்.

ஒரு நாட்டை பாதுகாக்கப் படை என்பது முக்கியம், சீர்கேடுகளை நிவர்த்தி செய்ய காவல்துறை, நீதித்துறை அவசியம். நாட்டின் வளர்ச்சி அதன் பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்டது. பொருளாதாரம் என்பது எல்லா வளங்களையும்.  பெருக்குவது. நாட்டு மக்களின் அறிவுத் திறனை மேம்படுத்த வேண்டும். இந்த மூன்று துறைகளிலும் வெற்றியை நிலைநாட்டவேண்டும்.

குறியீடாக இந்த மூன்றையும் மூன்று நாட்கள் வீதம் கொண்டாடி , இறுதியில் வெற்றியை அருளவேண்டும் என்பதுதான் அனைவராலும் கொண்டாடப்படும் பிரார்த்தனை. அவரவர் வழியில் அவரவர் நின்று வழிபடுங்கள். வழிபாட்டு முறைகளில் குறை காணாமல் நிறைக் கண்டு ஒற்றுமையுடன் மகிழ்ச்சி அடையுங்கள். இறுதியில் ஒற்றுமை , மகிழ்ச்சி இவையே மனநிறைவையும் , வெற்றியையும் தரக்கூடியவை.

திருவிழா என்பது சமுதாயம் சோர்வடையாமல் இருக்க, அவ்வப்போது புத்துணர்ச்சி ஊட்டவும், புதிய சக்தியை மனிதர்களுக்கு வழங்கவும், சமுதாய ஒற்றுமையை அவ்வப்போது நிலை நாட்டவும், பதிய உறவுகளை உருவாக்கவும் ஏற்படுத்தப்பட்டது. திருவிழாக்கள் எல்லாமே முழு நிலா காலங்களில் கொண்டாடப்பட்டுள்ளன என்பது சங்க நூல் மூலம் அறிகிறோம்

"நிலவே நீல் நிற விசும்பில் பல்கதிர் பரப்பி கலிகெழு மறுகின் விழவு அயரும்பே

ஒரு சாரார் மூன்று நாட்கள்  பார்வதிக்கும் அதாவது துர்க்கை, மூன்று நாட்கள் லக்ஷ்மிக்கும் , மூன்று நாட்கள் சரஸ்வதிக்கும் கொண்டாடி ,  இறுதியில் அவரவர் வாழ்வாதாரத்துக்கு அடிப்படையாக இருக்கக்கூடிய கருவிகள், ஆயுதங்கள், வாகனங்கள், புத்தகங்கள், எழுத்தாணிகள் போன்றவற்றை வணங்கி வழிபடுகின்றனர்.

ஒரு சாரார் காளியம்மன், ஒன்பது நாள் போரில் மகிஷாசுரன் என்ற அரக்கனை அழித்ததை, பத்தாவது நாள் வெற்றி நாளாகக் கொண்டாடுகின்றனர். ஒன்பது நாளும் காளியை வழிபடுகின்றனர்.

ஒரு சாரார் ஒன்பது நாளும் மஹாலக்ஷ்மியை வழிபட்டு, பத்தாவது நாள் விஜயதசமி நாளாக, ஆயுத பூஜை நாளாகக் கொண்டாடுகின்றனர்.

ஒருசாரார் ஒன்பது நாளும் ஒன்பது சக்திகளை வழிபட்டு , பத்தாவது நாள் விஜயதசமி, ஆயுத பூஜை நாளாகக் கொண்டாடுகின்றனர்.

ஒருசாரார் அயோத்தி சக்கரவர்த்தி இராமபிரான் , பத்து தலை ராவணனை ஒன்பது நாள் போரிட்டு, பத்தாம் நாள் தசமி அன்று , தசமுகனை அழித்த நாளாக "தச ஹரா" என்று அழைத்துக் கொண்டாடுகின்றனர்.‌

ஆனால் பாரத தேசம் முழுவதும் ஒரே நேரத்தில் ஒன்பது நாளும் கொண்டாடப்படக்கூடிய ஒரு விழாவாக இருக்கிறது என்பது நம்மை ஒரு புள்ளியில் இணைக்கிறது.‌

விஜய தசமி அன்று  வில்லுக்கு வெற்றி தேடிதந்துவில் விஜயனாக மாற்றிய நன்னாள்.  பாண்டவர்கள் பன்னிரண்டு வருடம் வனவாசம் முடிந்து , ஒரு வருட காலமாக அஞ்ஞாத வாசம்  அதாவது தலைமறைவாக வாழவேண்டும். அப்போது அவர்களுடைய ஆயுதங்களையும் வன்னி மரத்தில் மறைத்து வைத்து, அஞ்ஞாத வாசம் சென்றனர். அஞ்ஞாத வாசத்தில்  இந்திரலோகத்தில் தான் பெற்ற சாபத்தைப் பயன்படுத்தி, அர்ஜுனன் பிருகன்னளை என்ற பேடியாக, விராட மன்னன் புதல்விக்கு நடனக் கலை பயில்விக்கும் வேலையை ஏற்றிருந்தான். அந்த நேரத்தில் போருக்கு வந்த கௌரவர்களை  விராட மன்னன் உத்தரனை முன்னிட்டு, வன்னி மரத்தில் அம்பு எய்தி ,  வன்னி மரத்தில் மறைத்து வைத்திருந்த காண்டீபம் என்ற வில்லை எடுத்துப் போரிட்டு வெற்றி பெற்றான். வன்னி மரத்தில் அம்பு எய்தி காண்டீபம் கிடைக்கப் பெற்ற நாள் இன்றைய விஜயதசமி நாள் , வெற்றிக்கு வழிகோலிய நாள்.‌

இராமனும் வன்னி மரத்தை வலம் செய்து , இலங்கைக்குச் சென்று இராவணனை வதம் செய்தான் என்ற நம்பிக்கையில் மராட்டிய மன்னர்கள் வன்னி மரத்தை வழிபட்டு வன்னிமர இலையைப் பிராசாதமாகப் பெற்று போருக்குச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.‌


இன்றும் தமிழ்நாட்டில் பெருமாள் கோவில்களில் அம்பு விடுதல் என்ற ஒரு நிகழ்வு நடைபெறுகிறது. வன்னி மரத்தின் மீது அம்பு விடுதல் அல்லது அம்பு குத்தல் என்ற நிகழ்வுகள் சிவன், விஷ்ணு , முருகன், அம்பாள் கோவில்களில் நடைபெறுகின்றன.

இந்த அம்பு குத்தல் நிகழ்வுகளைச் சங்க நூல் ஒன்றில் ஒரு குறிப்பு கிடைக்கப் பெறுகின்றன.‌ இல்லையென்றால் தமிழகத்தில் இது ஆரியத் திணிப்பு என்றொரு திரிபு வாதம் ஏற்பட்டு விடும்.

"தெம்முனை சிதைத்த கடும்பரிப்புரவி
வார்கழல் பொலிந்த வன்கண் மழவர்
பூந்தொடை விழவின் தலைநாள் அன்ன
தருமணல் ஞெமிரிய திருநகர் முற்றம்"
                                                       - அகநானூறு 187

தொடை என்பது அம்பு. "புதிய அம்பு குத்தல் விழா" என்ற " பூந்தொடை விழவு", நீண்ட கழல்களையுடைய மழவர் இனமக்கள் ( வன்னிய மக்கள்) கொண்டாடிய விழா என்பது தெரியவருகிறது.

கம்பர் இயற்றிய சிலை எழுபது என்ற நூலின் தொடக்கத்தில்,

" சொன் மங்கலம் பொருந்தும் தொல்லுலகிற் பல்லுயிரும்
தன் மங்கலம் பெருந்தும் நான்மறையு நனிவிளங்கும்
வன் மங்கலம் பொருந்தி வளர் வனிய குலவரசர்
வின் மங்கலம் பொருந்தும் விறற்றசமி நாட்கொளினே"

வலிமையும் மங்கையும் பொருந்திய நீண்ட இவற்றினையுடைய வன்னிய குல அரசர்கள், மங்கலம் பொருந்திய விஜயதசமி நன்னாளில் வில்லேந்தினால் , மங்கலாமான பண்டைய உலகில் பல உயிர்களுக்கு மங்கலம் உண்டாகும் , நான்கு மறைகளும் சிறக்கும், என்பது மேற்கூறிய பாடலின் விளக்கம். 

விற்படையில் சிறப்புற்று விளங்கிய க்ஷத்திரிய வம்சத்தில் வந்த வன்னியக் குல மக்கள் விஜயதசமி அன்று வில்விழா கொண்டாடுவது என்பது மரபு. அன்று வன்னி மரத்தின் மீது புதிய அம்பு குத்தல் என்று வில் பயிற்சியைத் தொடங்கியதாகவும் தெரிகிறது. இந்தப் பண்பாடு இன்று சிதைந்து காணப்படுகிறது.

வன்னி மரம் என்பது என்பது வீரத்தைக் குறிக்கும் மரம். வீரத்தை அம்பு குத்தி வெற்றி அடைந்த " வெற்றி நாள்" .‌

இந்த வெற்றி நன்னாளில் பல இனம், சமயம் சார்ந்த வேற்றுமைகளைக் கலைந்து, ஒற்றுமையாகச் சனாதன தர்ம நெறியில் விழாவைக் கொண்டாடி, அதர்மத்தை அழித்து, ஒற்றுமையுடன் மகிழ்ச்சியாக இருக்கவேண்டும். அவரவர் இஷ்ட தெய்வங்கள் அவரவர் வழியில் நற்கதியை அருளட்டும்.‌

நம்மாழ்வார் திருவாய்மொழியில் அருளியபடி

"அவரவர் தமதமது அறிவு அறி வகைவகை
அவரவர் இறையவர் என அடி அடைவர்கள்
அவரவர் இறையவர் குறைவு இலர் இறையவர்
அவரவர் விதிவழி அடைய நின்றனரே"

                                                            
"ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு , பலமே வாழ்வு"

வாழ்வதற்கான வழிமுறைகளையே மனிதநேயங்கள் விரும்பும்

வாழ்வதற்கான வழிமுறைகளை வகுத்தது மனிதநேயங்கள்

அவரவர் வழியில் நின்று மனிதநேயம் காப்போம்

அவரவர் வழிநின்று ஒற்றுமையுடன் வெற்றி காண்போம்

விஜயதசமி நல்வாழ்த்துகள் 


மகர சடகோபன்
தென்திருப்பேரை

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புள்ளும் சிலம்பினகாண் புள்ளரையன் கோயில் (அடியேன் அனுபவம் இன்று)

கம்பனின் அம்பறாத்தூணி

மக்களின் தலைவன்